போயிங் 777 விமானங்களை அடிமாட்டு விலைக்கு விற்ற ஏர் இந்தியா! - அம்பலமாக்கும் வினோத் ராய்
டெல்லி: பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட போயிங் 777 விமானங்களை ஐந்தில் ஒரு பங்கு விலைக்கு ஏர் இந்தியா நிறுவனம் விற்றதாக வினோத் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு எட்டு போயிங் 777 விமானங்களை வாங்கியது. ஒரு விமானத்தின் விலை ரூ 1400 கோடியாகும்.
இந்த எட்டு விமானங்களைக் கொண்டு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டது. விமானங்கள் வாங்கப்பட்ட 5 ஆண்டுகளில், ஏர் இந்தியாவின் கடன் சுமையைக் குறைப்பதாகக் கூறி 5 விமானங்களை இட்டிஹாட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. மீதியுள்ள மூன்று விமானங்களையும் விரைவில் விற்கப் போகிறார்களாம்.
இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் கூறுகையில், "இந்த விமானங்களை வாங்க பெரும் தொகையைச் செலுத்திய ஏர் இந்தியா, ஐந்து ஆண்டுகள் கழித்து, அடிமாட்டு விலைக்கு இட்டிஹாட் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. அதாவது விமானத்தின் உண்மையான விலையில் ஐந்தில் ஒரு பங்குக்கு, அதாவது ரூ 420 கோடிக்கு ஒவ்வொரு விமானத்தையும் விற்றுள்ளது," என்றார்.
ஏர் இந்தியா நிறுவனம் கிட்டத்தட்ட ரூ 44000 கோடி கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.