லேட்டாக வந்த கேரள ஆளுநர் சதாசிவத்தை ஏற்றாமல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
கொச்சி: தாமதமாக ஏர்போர்ட் வந்ததாக கூறி, கேரள ஆளுநர் பி.சதாசிவத்தை விமானத்தில் ஏற்ற மறுத்து, ஏர் இந்தியா விமானம் கிளம்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள ஆளுநர் சதாசிவம் (உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) நேற்று இரவு கொச்சியில் இருந்து தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வருவதற்காக ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.
இரவு 9.15 மணிக்கு கிளம்ப வேண்டிய அந்த விமானம், தாமதமாக இரவு 10.45 மணிக்கு கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே 10.35 மணிக்கு சதாசிவம் ஏர்போர்ட் வந்துள்ளார்.
ஆனால், ஏற்கனவே பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிவிட்டதாகவும், எனவே, சதாசிவத்தை விமானத்தில் ஏற்ற முடியாது என்றும் பைலட் மறுத்துள்ளார். எனவே, இரவு கொச்சியிலுள்ள அரசினர் பங்களாவிலேயே சதாசிவம் தங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இன்று காலை விமானத்தில் சதாசிவம், விமானத்தில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து, ஏர் இந்தியா மற்றும் இந்திய சிவில் விமான துறையிடம் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் தரப்பட்டுள்து.