இவரல்லவா ஊழியர்.. ஷிப்ட் முடிந்ததும் கிளம்பி சென்ற ஏர் இந்தியா பைலட்.. பஸ்சில் அனுப்பப்பட்ட பயணிகள்
ஏர் இந்தியா விமானி ஒருவர் ஷிப்ட் முடிந்ததால் விமானத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்று இருக்கிறார்.
ஜெய்ப்பூர்: லக்னோவில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் விமானியின் பணி நேரம் முடிந்ததன் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மேலும் இந்த விமானம் செல்ல வேண்டிய நேரத்தை விட மிகவும் தாமதமாகவே ஜெய்ப்பூருக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இன்னமும் அந்த விமானம் ஜெய்ப்பூரிலேயே இருக்கிறது.
இதன் காரணமாக அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பஸ்ஸில் டெல்லிக்கு செல்லும்படி ஏர் இந்தியா நிறுவனம் கூறியிருக்கிறது.
கால தாமதமானது
லக்னோவில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் மிகவும் காலதாமதமாக சென்று இருக்கிறது. ஜெய்ப்பூருக்கு சரியாக இரவு 9 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் இரவு 1.30 மணிக்கு சென்று இருக்கிறது. மேலும் அங்கிருந்து டெல்லி கிளம்புவதிலும் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் நிலவும் புகை மூட்டம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பாதியில் சென்ற விமானி
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் சரியாக 2 மணிக்கு விமானம் நடைபாதையில் ரெடியாக கிளம்புவதற்கு நின்று இருக்கிறது. ஆனால் விமானத்தில் இருந்த அந்த ஏர் இந்தியா விமானி உடனடியாக விமானத்தை விட்டு கீழே இறங்கி இருக்கிறார். 2 மணியுடன் அவரது பனி முடிவடைந்ததால் அவர் விமானத்தைவிட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த விமானத்தை அப்போது உடனடியாக இயக்குவதற்கும் எந்த விமானியும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கிடைக்காமல் போய் இருக்கிறார்கள்
பஸ் ஏறி போங்க
இந்த நிலையில் அந்த விமானத்தின் பயணிகள் அனைவரும் பாதியில் இறக்கி விடப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் பயணிகளிடம் ''உங்களுக்கு பணம் அளிக்கப்டும் பஸ் பிடித்து செல்லுங்கள்'' என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் பயணிகள் அவரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஆனாலும் அங்கு இருந்த 48 பயணிகளும் பஸ் பிடித்து ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.
எந்த நடவடிக்கையும் இல்லை
விமானத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அந்த விமானி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஜெய்ப்பூரில் நிறுத்தப்பட்ட அந்த விமானம் இன்னும் அதே இடத்தில் இருக்கிறது. மேலும் அந்த விமானி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டு இருக்கிறது. அவர் ஏற்கனவே அவரது நேரத்தையும் தாண்டி அதிக நேரம் உழைத்து இருப்பதாக கூறியுள்ளனர். இது போல் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நடத்தது என்பது குறிப்பிடத்தக்கது.