மும்பையில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்: பயணிகள் உயிர்தப்பினர்
மும்பை: மங்களூரில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி ஓடுதளத்தில் மோதியதில் நல்லவேளையாக யாரும் காயம் அடையவில்லை.
ஏர் இந்தியா விமானம் 7 சிப்பந்திகள் உள்பட 194 பேருடன் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மும்பைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அதன் வால் பகுதி தரையில் மோதியது. இந்த விபத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து விமானிகள் இருவரும் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மை காலமாக ஏர் இந்தியா நிறுவனம் நிதி உள்பட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் பல ஏர் இந்தியா விமானங்கள் 1 முதல் 9 மணிநேரம் தாமதமாக கிளம்பியுள்ளன. அதிலும் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியை காண ஏர் இந்தியா விமானத்தில் கிளம்ப 8 பேர் கடந்த சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு சென்றனர். விமானம் 10 மணிநேரம் தாமதாக கிளம்பியது. இதனால் அவர்களால் இந்தியா விளையாடியதை பார்க்க முடியாமல் போனது.
சிப்பந்திகள் பற்றாக்குறை இருந்ததால் அந்த விமானம் 10 மணிநேரம் தாமதாக கிளம்பியது என்று தெரிவிக்கப்பட்டது.