ஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை- தேசவிரோதம் என மத்திய அரசு மீது சு.சுவாமி பாய்ச்சல்
டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100% பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் இம்முடிவு தேசவிரோதம் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ58.000 கோடி கடன் உள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருகிறது.
இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மார்ச் 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே 2018-ம் ஆண்டிலும் ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முன்வந்தது. ஆனால் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதன்பின்னர் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில் ஏர் இந்தியாவின் 100% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் விற்பனை செய்யும் அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சு.சுவாமி பாய்ச்சல்
மத்திய அரசின் இம்முடிவுக்கு பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் இந்நடவடிக்கையை தேசவிரோதம் என்றும் சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
Air India disinvestment process restarts today https://t.co/72eklh9C3g: THIS DEAL IS WHOLLY ANTI NATIONAL and IWILL FORCED TO GO TO COURT. WE CANNOT SELL OUR FAMILY SILVER
— Subramanian Swamy (@Swamy39) January 27, 2020
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு முழுவதுமே தேசவிரோத நடவடிக்கை. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல இருக்கிறேன் என காட்டமாக பதிவிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
மத்திய அரசின் இம்முடிவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மிக கடுமையாக விமர்சித்துள்ளன.