உள்நாட்டு பயணிகளுக்கு 'நோ' அசைவம்... ஏர்இந்தியா திடீர் அறிவிப்பு!
அனைத்து உள்நாட்டு விமானங்களின் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கான உணவுப் பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் நீக்கப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லி: ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் எகனாமிக் வகுப்பு பயணிகளுக்கான உணவுப் பட்டியலில் இருந்து அசைவம் நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ. 55 ஆயிரம் கோடி கடனில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் சில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் சாலட் எனப்படும் பச்சடி உணவை விரும்பி கேட்பவர்களுக்கு மட்டும் கொடுக்கவும், விமானத்தில் பயணத்தில் படிக்க வைக்கப்படும் பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேவையற்ற செலவினங்களை குறைக்கவும், விருந்தோம்பல் திறனை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டணத்தை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் உள்நாட்டு விமானங்களில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் அஷ்வணி லோஹனி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் சர்வதேச விமானங்களிலும், உள்நாட்டு விமானங்களில் முதல்வகுப்பு பயணிகளுக்கும அசைவ உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும் என ஏர்இந்தியா தெரிவித்துள்ளது. இந்த முடிவுகளை ஏர்இந்தியா 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண தூரத்தை உடைய அனைத்து விமானங்களிலும் அசைவ உணவுகள் வழங்குவதை 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஏர்இந்தியா நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.