25 கி.மீ வித்தியாசத்தில் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்பிய ஏர் இந்தியா, சிங்கப்பூர் விமானங்கள்!
டெல்லி: உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை வீசித் தகர்க்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்திற்கு 25 கிலோமீட்டடர் தொலைவில் பின்தங்கி வந்தது, ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் பேராபத்திலிருந்து தப்பியுள்ளன.
இந்த விமானங்களுக்கு முன்பாகப் போய் மலேசிய விமானம் சிக்கிக் கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்துக்கும், இந்த இரு விமானங்களுக்கும் இடையே வெறும் 25 கிலோமீட்டர் இடைவெளிதான் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளைட்ரேடார் 24 தரும் தகவல்
24 மணி நேர உலகளாவிய விமானக் கண்காணிப்பு சேவை, அதாவது பிளைட்ரேடார் 24 என்ற அமைப்பு கொடுத்துள்ள தகவலில் இது தெரிய வந்துள்ளது.
போயிங் விமானங்கள்
ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 777 விமானமும் உக்ரைனில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சம்பவ சமயத்தின்போது 25 கிலோமீ்ட்டர் தொலைவில் இருந்துள்ளதாக பிளைட்ரேடார் கூறியுள்ளது.
ஆபத்தைத் தவிர்ப்போம்
உக்ரைன் போன்ற போர் நடைபெறும் பகுதிகளின் வான்பகுதியைப் பயன்படுத்துவதை ஏர் இந்தியா எப்போதுமே தவிர்க்கும். இதுதொடர்பான அனைத்து எச்சரிக்கைச் செய்திகளையும் ஏர் இந்தியா கவனத்தில் கொள்ளும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பாவுக்குச் செல்லும்போது
மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல பல்வேறு வழிகள் இருப்பதால் பிரச்சினை இல்லாத மார்க்கங்களில் செல்லும்படி ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.