டெல்லியில் சுத்தமான காற்று மருந்தளவு கூட இல்லை; உயிர்களைக் குடிக்கும் மாசுபாடு - ”ஷாக்” ஆய்வு!
டெல்லி: காற்று மாசுபாட்டில் அதிக உயிர்களை காவு வாங்கும் உலக நாடுகளின் பட்டிலில் நமது தலைநகர் டெல்லி 2 ஆவது இடத்தில் உள்ளது.
இது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி அதிக சுற்றுச்சூழல் மாசுபாடுகள் நிறைந்த உலகின் டாப் 3 நகரங்களின் பட்டியலில் 2050 ஆம் ஆண்டு வரை டெல்லி இடம் பிடித்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிக சுற்றுசூழல் மாசுபாடு, குறிப்பாக காற்று மாசுபாடு நிறைந்த நகரங்கள், அவற்றில் உள்ள மாசுபாடுகளை அகற்ற ஆகும் கால அளவு குறித்து அறிவியல் இதழான நேச்சர் ஒரு ஆய்வை நடத்தியது. அதன் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
மாசுபாடு நிறைந்த நகரங்கள்:
இதில் 2050 ஆம் ஆண்டு வரை மாசுபாடுகள் நிறைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி டாப் 3 இடங்களில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் அதிக மாசுபாடு நிறைந்த பட்டியலில் டெல்லியும் உள்ளதாக சமீபத்தில் தான் உலக சுகாதார மையம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
2ம் இடத்தில் டெல்லி:
நேச்சர் நடத்திய ஆய்வு குறித்து பேராசிரியர் டாக்டர்.ஜோஸ் லிலிவில்ட் கூறுகையில், "வறண்ட சூழ்நிலையில் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் காற்றில் நிறைந்துள்ள மாசுபாடுகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் டெல்லி, டாப் 3 இடங்களில் 2வதாக இடம்பெற்றுள்ளது.
தூய்மையான காற்றே இல்லை:
இங்கு தூய்மையான காற்று இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. டெல்லியில் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது" என்றார்.
தொழிற்சாலைகள்தான் காரணம்:
டெல்லியில் உள்ள காற்று மாசுபாடுகளை அகற்றி, காற்றின் தூய்மையின் தரத்தை உயர்த்த 2050 ஆம் ஆண்டு வரை முடியாது எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலமாக டெல்லியில் அதிகரித்து வரும் வாகன நெரிசலும், தொழிற்சாலை கழிவுகளும் தான் இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த காற்று மாசுபாடு கிட்டதட்ட 30,000 உயிர்களைக் காவு வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.