ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மீது ஒருவாரத்தில் குற்றப் பத்திரிகை!!
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மீது ஒருவாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார்.
மத்தியில் தொலைத் தொடர்பு அமைச்சராக 2004- 2007ஆம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் கோரி விண்ணப்பித்தது.
ஆனால் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் வழங்கவில்லை.
மேக்ஸிசுக்கு விற்கப்பட்ட ஏர்செல்
பின்னர் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது. இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார்.
சன் குழுமத்தில் மேக்ஸிஸ் முதலீடு
இதனால் ஏர்செல் பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டி.டி.எச்சில் மேக்ஸிஸ் நிறுவனம் பல நூறு கோடி முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு.
பல ஆண்டுகால இழுத்தடிப்பு
இதனால் தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடந்த போதும் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு நீடிக்கிறது.
உச்சநீதிமன்றம் காட்டம்
உச்சநீதிமன்றமே ஏன் இந்த வழக்கு விசாரணை இன்னமும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தது. சிபிஐ தரப்பிலோ மலேசியா அரசு ஆதாரங்களை தரவில்லை.. விசாரணைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றெல்லாம் கூறப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் இல்லை
இதனால் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவே இல்லை. இதில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது தொடர்பாக சிபிஐ விசாரணை குழுவுக்கும் அதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கும் இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டது.
மவுனம் சாதித்த காங்கிரஸ் அரசு
இதனால் இந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அட்டர்னி ஜெனரல் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
க்ரீன் சிக்னல் கொடுத்த மோடி அரசு
பின்னர் மோடி அரசு பதவியேற்ற நிலையில் தற்போதைய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, தற்போது இருக்கின்ற ஆதாரங்களை வைத்தே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியும் என்று அதிரடியாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்திலும்...
மேலும் நாடாளுமன்றத்திலும் கூட தயாநிதி மாறன் மீதான வழக்கின் நிலவரம் குறித்து அதிமுக கேள்வி எழுப்பியிருந்தது.
ஒருவாரத்தில் குற்றப்பத்திரிகை
இந்நிலையில் ஒருவாரத்தில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார்.