ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஆக. 7வரை தடை நீடிப்பு
Recommended Video
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7ம் தேதிவரை தடை நீட்டிப்பு செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். இந்த ஒப்பந்தத்தின்போது, சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டு பலன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சிபிஐ முன்னிலையிலும் ப.சிதம்பரம் ஆஜராகினார்.
இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் ஜூலை 10ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10ம் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ப. சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் ஆக.7 வரை கைது செய்ய தடை நீட்டிப்பு செய்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.