ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கலாநிதி, தயாநிதி, காவேரி முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைதாகலாம் என்ற அச்சத்தினால் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஏர்செல்-மேக்சிஸ் பேர முறைகேடு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், இன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்நிலையில், வழக்கறிஞர்கள் காலஅவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதையடுத்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி தயாநிதிமாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.