ஏர்செல்- மாக்சிஸ் வழக்கு.. மாறன் சகோதரர்களுக்கு எதிராக இடியை இறக்கும் "ஈ.டி"
டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு எதிரான ஏர்செல் மாக்சிஸ் வழக்கில், அமலாக்கப் பிரிவு, தீவிரம் காட்டி வருவதால் மாறன் சகோதரர்களுக்கு சிக்கல் பெரிதாகியுள்ளது.
ஏர்செல் - மாக்சிஸ் விவகாரத்தில் ரூ. 742.58 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக கூறுகிறது அமலாக்கப் பிரிவு குற்றச்சாட்டு.
மொரீஷியஸைச் சேர்ந்த சில நிறுவனங்களின் மூலமாக இந்த முறைகேடு நடந்ததாகவும் அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
சிவசங்கரனின் ஏர்செல்
சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார்.
தயாநிதி மாறனின் மிரட்டல்
இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார். இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர்.
விற்றதுமே 14 லைசென்ஸ்
இந்த நிலையில், ஏர்செல் நிர்வாகம் கை மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மாக்சிஸ் நிறுவனம். இதுதான் சர்ச்சையானது.
சிபிஐ - அமலாக்கப் பிரிவு
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. அதேபோல பண விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் விசாரித்து வருகிறது.
விசாரணை தொடங்கியது
இந்த வழக்கில் தற்போது சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. பிப்ரவரி 6ம் தேதி விசாரணை தொடரவுள்ளது.
இருவருக்கும் சிக்கல்
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தயாநிதி மாறன் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் கோ அக்யூஸ்டாக சேர்க்கப்பட்டுள்ளார் கலாநிதி மாறன்.
வலுவான ஆதாரம்
இதுகுறித்து அமலாக்கப் பிரிவு தரப்பில் கூறுகையில், தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனத்தில் நிதி முதலீடு செய்திருப்பது தெளிவாக உள்ளது. அதை அவர் மறைக்க முடியாது. அந்தப் பணம் மோசடிப் பணமாகும். இது சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாநிதிக்கு பிரச்சினை
மேலும், கலாநிதி மாறன் எஸ்டிடிபிஎல் (சன் டைரக்ட்) மற்றும் எஸ்ஏஎப்எல் எனப்படும் செளத் ஏசியா எப்எம் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களை, மொரீஷியஸைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்த இரு நிறுவனங்களிலும்தான் மோசடியான நிதி முதலீடு செய்யப்படடுள்ளது.
இவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் தவிர கலாநிதி மாறனின் மனைவி காவேரி, எஸ்ஏஎப்எல் நிறுவன நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.