ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி வாய்தா கேட்ட மாறன் சகோதரர்கள்.. ஒத்திவைப்பு
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கு விசாரணைக்காக தயாநிதிமாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கறிஞர்கள் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை வரும் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளினால் 2ஜி வழக்கின் ஒரு அங்கமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் உரிமை யாளரான சிவசங்கரனை கட்டா யப்படுத்தி அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது. பதிலுக்கு மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனங்கள் வழியாக சன் குழுமத்துக்கு ரூ.742.58 ஆதாயம் அடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்தார்; இதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிடிஹெச் நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்தனர் என்பது சிபிஐ குற்றச்சாட்டு.
இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர். இதனடிப்படையில் சன் குழுமத்துக்கு சொந்தமான ரூ742 கோடி சொத்துகளை முடக்கவும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போய் தப்பித்தது சன் குழுமம்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் கடந்த ஜனவரி 8ம் தேதி அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தயாநிதி, கலாநிதி, அவரின் மனைவி கலாநிதி காவேரி, கே.சண்முகம், சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் மற்றும், சன் டைரக்ட் நிறுவனம், சவுத் ஏசியா எப்.எம். நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. அப்போது மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த வாதங்களை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் குற்றம்சாட்ப்பட்ட 6 பேரும் ஜூலை 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக தயாநிதிமாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கறிஞர்கள் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை வரும் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.