ஏர்செல்-மேக்சிஸ் டீல்.. சிதம்பரத்திற்கு எதிரான சு.சாமி வழக்கில் பிப்.9ல் விசாரணை!
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 9ல் விசாரணைக்கு வருகிறது.
ஏர்செல்-மேக்சிஸ் முதலீடுக்கு வசதியாக விதிமுறையை மீறி, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் மூலம் 2006ம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதித்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த முதலீட்டின் மதிப்பு ரூ.3500 கோடி.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்மந்தப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரையும், டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் சு.சாமி தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 9ல் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே டெல்லி கோர்ட், மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது பெரிய விஷயமில்லை என்றும், தான் தொடர்ந்த வழக்கே முக்கியத்துவமானது என்றும் சு.சாமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
சிவசங்கரனை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில்தான் மாறன்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இது ஒரு சிறு வழக்கு. முக்கியமான வழக்கு என்பது அன்னிய முதலீடு வாரியம், ரூ.3500 கோடி மதிப்புள்ள ஏர்செல்-மேக்சிஸ் டீலுக்கு ஓ.கே சொன்னதுதான் என்று சு.சுவாமி கூறியுள்ளார்.