ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சென்னை, கொல்கத்தாவில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பான சென்னை, கொல்கத்தாவில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
சென்னை/ கொல்கத்தா: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் கொல்கத்தாவில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அன்னிய முதலீட்டு வாரியம் அனுமதித்தது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று 4 பேருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் 4 இடங்களிலும் கொல்கத்தாவில் 2 இடங்களிலும் இச் சோதனை நடைபெற்றதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அதில், சென்னை தேனாம்பேட்டையில் சடையவேல் கைலாசம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடைபெற்றது. இதேபோல் திருவான்மியூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் சுஜய் சாம்பமூர்த்தி, ராம்ஜி நடராஜன் ஆகியோரது இடங்களிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தாவில் மனோஜ் மோகன்கா என்பவருக்கு சொந்தமான லீ ரோடு இடத்தில் 2 இடங்கள் மற்றும் லவ்லாக் ப்ளேஷ் ஆகியவற்றிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.