ஏர்செல்-மேக்சிஸ்: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை.. விசாரணை ஒத்திவைப்பு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி முறைகேடாக மலேசியாவில் இருக்கும் மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் இன்னும் கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கியது. இரண்டு முறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியது.கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.
தற்போது கார்த்தி மீது மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிகை மீதான வாதங்கள் தற்போது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதன் மீதான இரண்டாம் கட்ட விசாரணை இன்று நடந்தது. இந்த நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை மீதான அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம். அடுத்தகட்ட விசாரணையில் முக்கிய சாட்சியங்கள் விசாரிக்கப்பட இருக்கிறார்கள்.