ஏர்செல்-மேக்சிஸ்.. மலேசிய தொழிலதிபர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மலேசிய தொழிலதிபர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க மறுத்துள்ளது.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய மலேசிய தொழிலதிபர்கள் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 2 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில், மலேசிய தொழிலதிபர்கள் அனந்த கிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி, சிபிஐ சார்பாக மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 2 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது என்றும், அவர்கள் மலேசிய குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், இந்த நடவடிக்கை என்றும் கூறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி, சிபிஐ நோட்டீஸ் விட்டும், எந்த பதிலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் மேக்சிஸ் - மாறன் பிரதர்ஸ்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், இவரது மனைவி காவேரி கலாநிதி, சௌத் ஏசியா எஃப்எம் நிறுவன (எஸ்ஏஎஃப்எல்) மேலாண் இயக்குநர் கே.சண்முகம் ஆகியோர் மீதும் மலேசிய தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன் மற்றும் சன் டைரக்ட், சவுத் ஏசியா எஃப்எம் ஆகிய 2 நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வழக்கு தள்ளுபடி
இந்த வழக்குகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் குற்றம் செய்ததற்குப் போதிய முகாந்திரம் இல்லாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதேபோல், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அமலாக்கத்துறை மேல் முறையீடு
இந்நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.
மாறன் பிரதர்ஸ்க்கு நெருக்கடி
மலேசிய தொழிலதிபர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க இயலாது என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இருவருக்கும் நெருக்கடி முற்றுகிறது என்று கூறப்படுகிறது.