திவால் நிலையில் ஏர்செல் ... லட்சக்கணக்கில் முதலீடு செய்த விநியோகிஸ்தர்கள் திண்டாட்டம்!
சிக்னல் கோளாறை சரிசெய்யாத ஏர்செல் நிறுவனத்தின் போராட்டத்தால் டெலிகாம் நிறுவனங்களுக்கு சிம் கார்டு வாங்க முதலீடு விநியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் டெபாசிட் திரும்ப கிடைக்குமா என்று கவலையடைந்துள்ளனர்
Recommended Video
டெல்லி: சிக்னல் கோளாறை சரிசெய்யாத ஏர்செல் போராட்டத்தால் டெலிகாம் நிறுவனங்களுக்கு சிம் கார்டு வாங்க முதலீடு விநியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் திண்டாட்டத்தில் உள்ளனர். திடீரென ஏர்செல் திவாலானதாக அறிவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளதால் டெபாசிட் தொகை கிடைக்குமா என்று கவலையுடன் காத்திருக்கின்றனர்.
செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்திற்கும் ஏர்செல் நிறுவனத்திற்கும் இடையில் நிலவும் பிரச்னை காரணமாக கடந்த 10 நாட்களாக ஏர்செல் சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்னை மீண்டும் எழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து விநியோகிஸ்தர்களும், வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.
பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை எட்டாததையடுத்து ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. ஏர்செல் நெட்வொர்க் பிரச்னை தொடங்கியது முதலே விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சரிந்து வந்த ஏர்செல் பயன்பாடு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 800 ஏர்செல் சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் ஜனவரிக்குப் பிறகு 250 முதல் 300 சிம்கார்டுகளை விற்பதே சவாலானதாக இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த ஏர்செல் விநியோகிஸ்தர்கள் கூறியுள்ளனர். மொத்தமுள்ள 8 கோடி ஏரசெல் வாடிக்கையாளர்களில் தமிழகத்திலே அதிகம் பேர் இந்த நெட்வொர்க்கை பயன்படுத்துகின்றனர். கடந்த வாரத்தில் ஏர்செல் சிக்னல் கோளாறு ஏற்பட்டது முதலே லட்சக்கணக்கான மக்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாற விண்ணப்பித்து வருகின்றனர்.
விநியோகிஸ்தர்கள் எண்ணிக்கையும் சரிந்தது
தமிழகத்தில் ஏர்செல் விநியோகம் மூலம் ரூ. 250 கோடி வரை வருமானம் இருந்த நிலையில் ஜனவரிக்கு பிறகு ரூ. 100 கோடியாக குறைந்துள்ளது. இதே போன்று விநியோகிஸ்தர்கள் எண்ணிக்கையும் 1,200ல் இருந்து 800 ஆக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டது.
ஏர்செல் வேண்டுகோள்
ஏர்செல்லின் 60 சதவீத சைட்டுகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும், நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து இவர்கள் காத்திருப்பதாக விநியோகிஸ்தர்கள் காத்திருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு தொடர்ந்து தோள் கொடுக்குமாறு வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களுக்கு ஏர்செல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக கொண்டுள்ளது.
அச்சத்தில் விநியோகிஸ்தர்கள்
மும்பையை சேர்ந்த ஏர்செல் விநியோகிஸ்தர் ஒருவர் தான் ரூ. 3 லட்சம் மதிப்பிலான சிம்கார்டுகள் வைத்திருப்பதாகவும், இவருக்கு கீழ் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட ரீட்டெய்லர்களிடம் ரூ. 2 லட்சம் சிம்கார்டுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏர்செல் திடீரென மூடப்பட்டால் எங்களின் டெபாசிட் தொகை என்னவாகும் என்று தெரியவில்லை. இது குறித்து நிறுவனத்தின் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.