தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி... விமானத்தில் காத்திருந்த ராகுல் காந்தி, அமித் ஷா
சட்டசபை தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. ஹூப்ளி வந்த ராகுல் காந்தி, அமித்ஷாவின் விமானங்களை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர்
பெங்களூரு: சட்டசபை தேர்தல் நடக்க உள்ள கர்நாடகாவுக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தனி விமானங்களை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐந்தாவது சுற்று பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். மறுபுறம் பாஜ தேசியத் தலைவர் அமித் ஷாவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இருவரும் ஹூப்ளி விமான நிலையத்துக்கு, தனித் தனியாக சிறப்பு விமானத்தில் வந்தனர். அந்த விமானம் தரையிறங்கியதும், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அந்த விமானங்களை தீவிரமாக சோதனை செய்தனர். அதனால், இருவரும் சிறிது நேரம் விமானத்தில் காத்திருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இதுபோன்ற சோதனைகள் வழக்கமானதுதான் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.