எக்ஸ்பிரஸ் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி சோதித்த விமானப்படை.. உ.பியில் அசத்தல்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்களை விமானப்படையினர் இன்று தரையிறக்கினர்.
ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநில ஆக்ரா -லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்களை விமானப்படையினர் இன்று தரையிறக்கினர். இந்தியாவின் நீண்ட எக்ஸ்பிரஸ் சாலையான இச் சாலையை அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் திறந்துவைத்தார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரோ-லக்னோ இடையே 302 கி.மீ. தொலைவுக்கு ரூ.13 ஆயிரத்து 200 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் கனவுத்திட்டமான இத்திட்டப் பணிகள் முடிவடைந்தது.இந்நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது.
இந்தியாவின் நீண்ட எக்ஸ்பிரஸ் சாலையான இந்த சாலையை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் திறந்து வைத்தார்.
அப்போது, அந்த சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 8 போர் விமானங்களை தரையிறக்கி விமானப்படையினர் சோதனை செய்தனர். போர் உள்ளிட்ட அவசரகாலங்களில் விமானங்களை இயக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன், ராம் கோபால் யாதவ், ஷிவபால் யாதவ், தர்மேந்திர யாதவ், முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரேஷி, ஆசம் கான் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, கடந்த ஆண்டு மே மாதம் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையிலும் இந்திய விமானப்படை போர் விமானத்தை தரையிறக்கி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.