இனி ஏர்போர்ட்டுகளில் ராபர்ட் வாத்ரா விசுக்கென செல்ல முடியாது.. 'செக்கிங்' கட்டாயமாகிறது!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா இனி சில விமான நிலையங்களில் பரிசோதனையை தவிர்த்துவிட்டு செல்ல முடியாது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா விமான நிலையங்களில் வரிசையில் நின்று பரிசோதனை செய்யாமல் செல்லும் சலுகையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் வாத்ராவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை ரத்து செய்யுமாறு மத்திய விமான போக்குவரத்து துறை உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. இது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.
இந்நிலையில் கோவா உள்பட பல விமான நிலையங்கள் பரிசோதனை செய்யாமல் செல்லும் நபர்களின் பட்டியலில் இருந்து வாத்ராவின் பெயரை நீக்கியுள்ளன. இதன் மூலம் அந்த விமான நிலையங்களில் வாத்ரா வரிசையில் நின்று பரிசோதனை செய்த பிறகே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கோவா விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராபர்ட் வாத்ரா என்ன செய்தார் என்று அவரை பரிசோதிக்காமல் செல்ல அனுமதிக்கிறீர்கள் என்று பல பயணிகள் எங்களிடம் கேட்டனர். அதனால் தான் அவரது பெயரை அந்த பட்டியலில் இருந்து நீக்கினோம். பரிசோதனை செய்யாமல் செல்லும் சலுகை அனுபவிப்போர் பட்டியலில் வாத்ராவின் பெயர் இருப்பது பல பயணிகளுக்கு பிடிக்கவில்லை என்றார்.