பிரான்ஸ் அதிபருடன் மதிய விருந்தில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்
டெல்லி: குடியரசு தினவிழாவில் பங்கேற்க டெல்லி வந்துள்ள பிரான்ஸ் அதிபரை பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சந்தித்து பேசினார்.
நாட்டின் 67வது குடியரசு தின விழா இன்று தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதையடுத்து அதிபருடன் இன்று மதிய விருந்தில் கலந்து கொள்வதற்காக பிரெஞ்சு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று மதிய விருந்தில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை சந்தித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்காக நாளை நடைபெறும் ‘சர்ப்ஜித்' படப்பிடிப்பிலிருந்து சில மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராய் வந்ததாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். மேலும், பிரான்ஸ் நாட்டின் 2-வது உயரிய பொதுமக்களுக்கான விருது என கருதப்படும் ‘நைட் ஆப் தி ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்' என்ற விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.