ஐஸுக்கு அடிச்சது லக்கி.. குடியரசு தின விழாவில் பிரெஞ்சு அதிபருடன் விருந்து சாப்பிடுகிறார்!
மும்பை: நாளை நடைபெறும் குடியரசு தின விருந்தில் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுடன், ஒன்றாக அமர்ந்து மதிய விருந்து சாப்பிடும் அதிர்ஷ்டம் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்திருக்கிறது.
நாளை புது டெல்லியில் நடைபெறும் 67 வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருக்கிறார். நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் பிராங்கோயிஸ் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபருடன் விருந்து சாப்பிடும் அதிர்ஷ்டம் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்திருக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரெஞ்சு நாட்டின் தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர் ஸ்பெஷலான அழைப்பொன்றை விடுத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தற்போது 'சர்ப்ஜித்' என்னும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ள அவர் இன்றிரவே மும்பையில் இருந்து விமானத்தில் கிளம்புகிறாராம்.
இதனால் 'சர்ப்ஜித்' படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். நாளை நடைபெறும் இந்த விருந்தில் இந்தியாவில் பல்வேறு பதவிகளில் உள்ள உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளுகின்றனர்.
இந்த விருந்தானது புது டெல்லியில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நடைபெறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியளவில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.