கல்யாண் ஜூவல்லரி விளம்பரம்.. எடுத்தது ஒன்று வெளியானது ஒன்று.. நான் என்ன செய்ய... ஐஸ்வர்யா பதில்!
மும்பை: கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் விளக்கம் அளித்துள்ளார்.
தான் இந்த விளம்பரத்திற்காக கொடுத் போஸ் குறித்த புகைப்படத்தையும், விளம்பரப் படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, எடுத்த படம் ஒன்று, அதில் விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட விதம் வேறு.. இதற்கு நான் பொறுப்பாக முடியாது. இது முழுக்க முழுக்க அந்த விளம்பரத்தை வடிவமைத்த கிரியேட்டிவ் குழுவின் உரிமையாகும். அதில் நான் தலையிட முடியாது என்று ஐஸ்வர்யா விளக்கியுள்ளார்.
முன்னதாக ஐஸ்வர்யாவின் விளம்பரம், இனவெறியை வெளிப்படுத்துகிறது, சிறார் அடிமைத்தனத்தை ஆதரிப்பதாக உள்ளது என்று பரா நக்வி, நிஷா அகர்வால், எனாக்ஷி கங்குலி, பார்தி அலி, மது மேஹ்ரா, சாந்தா சின்ஹா, ஹர்ஷ் மந்தர், மிருதுளா பஜாஜ் ஆகியோர் கையெழுத்திட்டு ஒரு திறந்த மடலை எழுதியிருந்தனர்.
இதற்கு ஐஸ்வர்யா தனது பிஆர்ஓ மூலமாக அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....
இந்த விளம்பரம் தொடர்பான உங்களது கருத்துக்களை அறிந்தேன். இதில் நான் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட ஒரிஜினல் படத்தை இணைத்துள்ளேன். இந்தப் படம் பின்னர் விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விளம்பரம் எப்படி அமைய வேண்டும், புகைப்படம் எப்படி வர வேண்டும் என்பது கிரியேட்டிவ் இயக்குநருடைய உரிமையாகும். ஒரு பிராண்ட் விளம்பரத்தை சிறப்பாக வடிவமைப்பது எப்படி என்பதை அவர்தான் முடிவு செய்கிறார். அதில் யாரும் தலையிட முடியாது. நானும் தலையிட முடியாது.
இருப்பினும் உங்களது கருத்துக்களை நான் தாழ்மையுடன் பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட கிரியேட்டிவ் இயக்குநருக்கும், குழுவினருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட சர்ச்சை விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் ஒய்யாரமாக சோபாவில் அமர்ந்துள்ளார். அவருக்கு கருப்பு நிறத்திலான ஒரு சிறார் குடை பிடித்து நிற்பது போல உள்ளது. இதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக ஐஸ்வர்யா இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.