கொல்லத்தில் சுவாரசியம்.. கணவரிடம் இருந்து போலீஸ் கமிஷனர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மனைவி!
கொல்லம் நகர காவல் துறை கமிஷனராக பதவி அளிக்கப்பட்ட அஜீதா பேகம் , அப்பதவியில் நீடித்து வந்த அவரது கணவரிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொண்டார்.
கொல்லம் : கொல்லம் நகர காவல் துறை கமிஷனராக பதவி உயர்வு அளிக்கப்பட்ட அஜீதா பேகம், அப்பதவியில் நீடித்து வந்த அவரது கணவர் சதீஷ் பினோவிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொண்ட சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜீதா பேகம். கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் சதீஷ். கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சி முடித்த இருவரும் ஜம்மு- காஷ்மீர் , மத்திய பிரதேசத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
இருவருக்கும் திருமணம் ஆனதை தொடர்ந்து கடந்த 2011-இல் கொல்லத்துக்கு பணிமாறுதல் பெற்று வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். கொல்லம் (ஊரகம்) வருவாய் மாவட்ட எஸ்.பி.யாக அஜீதா இருந்தார். அதேபோல் அந்த மாவட்டத்தின் நகர்ப்புறம் எஸ்.பி.யான அவரது கணவர் சதீஷ் பினோவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
மகப்பேறு விடுமுறை
இந்நிலையில் அஜீதா கர்ப்பமாக இருந்ததால் சில மாதங்களுக்கு மகப்பேறு விடுமுறையில் சென்றுவிட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து எஸ்.பி.யாக இருந்த சதீஷ் பினோ, கொல்லம் நகர காவல் துறை கமிஷனராக பதவியேற்றார்.
கமிஷனராக மாற்றம்
பின்னர் மகப்பேறு விடுமுறை முடிந்து அஜீதா பணியில் சேர்ந்தார். அப்போது அவர், அவரது கணவர் சதீஷ் வகித்து வந்த கொல்லம் நகர காவல் துறை கமிஷனராக மாற்றப்பட்டார்.
பணி மாற்றம்
அப்பணியில் இருந்த சதீஷ், பத்தினம்திட்டா மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து கொல்லம் கமிஷனர் அலுவலகத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் அஜீதா வந்தார்.
கணவரிடம் இருந்து...
அங்கு தனது கணவர் சதீஷை வியாழக்கிழமை சந்தித்து அவரிடம் இருந்து கமிஷனர் பொறுப்பை பெற்றுக் கொண்டார். இந்த சம்பவம் காண்போரை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. தனது மனைவியின் வளர்ச்சிக்கு கணவர் ஊக்குவிப்பதை போன்று இருந்தது. அஜீதாவின் பணிகள் சிறக்க சதீஷ் வாழ்த்துகளை தெரிவித்தார்.
போதை பொருளை தடுக்க...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, கொல்லம் நகரில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது, போதை பொருள் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவது உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அஜீதா தெரிவித்தார்.
கணவரின் பிரச்சாரத்தை தொடர்வேன்
மேலும் போதை பொருளை ஒழிக்க கொல்லத்தை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொல்லம் கமிஷனராக இருந்த சதீஷ் தொடங்கியிருந்தார். அதை தான் தொடர்ந்து செயல்படுத்தவுள்ளதாக அஜீதா தெரிவித்தார்.