பாஜக ஆட்சியமைந்தால் இவர்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
டெல்லி: பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் பாதுகாப்புத்துறை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் அஜித் தோவல் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனரான அஜித் தோவல், 1968ம் ஆண்டு கேரள பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. 2005ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதியுடன் ஐபிஎஸ் சேவையில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். தற்போது விவேகானந்தா சர்வதேச பவுண்டேசனின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாருக்கு தீவிரவாதிகள் கடத்திச் சென்றபோது, இந்திய தரப்பு தூதராக செயலாற்றியவர் அஜித் தோவலாகும். மிசோ, பஞ்சாப் கலவரங்களின்போதும், காஷ்மீர் பிரச்னையின்போதும் தீரமுடன் செயலாற்றியுள்ளார். கீர்த்தி சக்கரா விருதுபெற்றுள்ள அஜித் தோவல் தீவிரவாத எதிர்ப்பிலும், பதிலடி தாக்குதல் வியூகங்கள் வகுப்பதிலும் புகழ் பெற்றவர்.
பாஜக தலைமையிலான அரசு அமைந்தால் அஜித் தோவலை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை பிரச்னையில் தமிழருக்கு எதிராக செயல்பட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், புதிய பாதுகாப்பு ஆலோசகர் யார் என்பதும் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் அனைவரையும் கவனிக்க வைக்கிறது.