ஆயுத கிடங்காக ராம் ரஹீம் ஆசிரமம்- ஏகே47 ரக துப்பாக்கி, இரும்பு லத்திகள், பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்
சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் ஆசிரமங்கள் ஆயுத கிடங்காக இருந்துள்ளன. துப்பாக்கிகள், வெடிபொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சண்டிகர்: சாமியார் ராம் ரஹீம் ஆசிரமத்தில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, பிஸ்டல்கள், ஆயிரக்கணக்கான இரும்பு லத்திகள், பெட்ரோல் குண்டுகள், ஹாக்கி ஸ்டிக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என ராம் ரஹீம் சிங்கை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக ராம் ரஹீம் சிங்கின் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் போட்டனர். இதில் 31 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் படுகாயமடந்தனர்.
ஹைகோர்ட் கண்டிப்பு
இந்த வன்முறையை ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு தடுக்கவில்லை. அதேநேரத்தில் இந்த வன்முறை பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மிக வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் ராம் ரஹீம்சிங்கின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆயுத கிடங்குகள்
இதையடுத்து ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமங்கள் சோதனையிடப்பட்டன. அப்போது ஆசிரமத்தில் பிஸ்டல்கள், ரைபிள்கள், ஏகே 47 ரக துப்பாக்கி, பல்லாயிரக்கணக்கான இரும்பு லத்திகள், கோடாலிகள், ஹாக்கி ஸ்டிக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
4,000 குண்டர்கள்
அத்துடன் வெடிபொருட்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவையும் ராம் ரஹீம் ஆசிரமங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன. சிர்சா ஆசிரமத்துக்குள் பதுங்கி இருந்த 4,000 ஆதரவு குண்டர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நாளை தண்டனை
ராம் ரஹீம் சிங்குக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளது. அப்போதும் ராம் ரஹீம் சிங் ஆதரவு குண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தடுக்க துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.