காங். தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க இதுவே சரியான தருணம்: ஏகே ஆண்டனி பேச்சுக்கு செம ஆதரவு!!
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்பதற்கு இதுவே சரியான தருணம் என ஏகே ஆண்டனி பேசியுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு இதுவே சரியான தருணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. உடல்நலக் குறைவால் சோனியா காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகிக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓராண்டுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்துவது எனவும் சோனியா காந்தியே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே .ஆண்டனி, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு இதுவே சரியான தருணம் எனக் கூறினார். இக்கருத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.