மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்: அகாலி தளம்
டெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என சிரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்தது மத்திய அரசு. இதனால் ஆந்திரா மாநில கட்சிகள் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகின்றன.
தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றன. பாஜகவின் கூட்டணி கட்சிகள் இதுவரை மவுனம் காத்து வந்தன.
இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதை வரவேற்கிறோம். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டோம் என்ற விநோத நிலைப்பாட்டை சிவசேனா எடுத்திருக்கிறது.
இதே போல அகாலிதளமும் வித்தியாசமான நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும்; அதற்காக மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என அகாலிதளத்தின் பிரேம்சந்த் சந்துமஜ்ரா தெரிவித்துள்ளார்.