கேரளா காங். எம்.எல்.ஏ. ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டு தான் போட்டாரு... மண்டையையே உடைச்சிட்டாங்களே!
மறைந்த இடதுசாரித் தலைவர் ஏகேஜியை அவதூறாக விமர்சித்த கேரளா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்ராமுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
பாலக்காடு: மறைந்த இடதுசாரித் தலைவர் ஏ.கே. கோபாலனின் (ஏகேஜி) திருமண வாழ்க்கையை அவதூறாக விமர்சித்த கேரளா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்ராமுக்கு எதிராக போராட்டங்கள் தொடருகின்றன. திரிதலாவில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் பல்ராம் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இடதுசாரித் தலைவருமான ஏகேஜி மக்களுக்காக போராடிய மகத்தான மனிதர். தேசம் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நாளில் சிறைவாசம் அனுபவித்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். தமது வாழ்க்கையை சுயசரிதையை நூலாகவும் வெளியிட்டுள்ளார். அதில் தமது திருமண வாழ்வை குறித்தும் பதிவு செய்திருக்கிறார் ஏகேஜி.
1952-ம் ஆண்டு 48 வயதில் 22 வயது சுசீலாவை 2-வது திருமணம் செய்ததாக ஏகேஜி பதிவு செய்திருக்கிறார். ஆனால் இதை திரித்து ஃபேஸ்புக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்ராம், ஏகேஜி தலைமறைவு வாழ்க்கை காலத்திலேயே சிறுமியாக இருந்த சுசீலாவை காதலித்தார் என அவதூறாக பதிவு செய்திருந்தார்.
இப்பதிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று திரிதலா தொகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு பல்ராம் சென்றிருந்தார். அங்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் பல்ராமுக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது கற்களும் முட்டைகளும் பல்ராம் மீது விசப்பட்டன. இதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். பல்ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டால் வந்த வினை!