'சைக்கிளுக்காக' சண்டை போடும் அப்பா-மகன்.. தேர்தல் கமிஷனிடம் போன சமாஜ்வாதி பஞ்சாயத்து
டெல்லி: சமாஜ்வாதி கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ், அடுத்து கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
கட்சியின் செயற்குழுவை கூட்டி தேசிய தலைவராக தன்னை அறிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தையும், கட்சியின் நிறுவன தலைவருமான முலாயம்சிங் யாதவ், நேற்று தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று சைக்கிள் சின்னம் தனது தலைமையிலான கட்சிக்கு உரியது என்று கூறி மனு கொடுத்தார்.
இதையடுத்து அதே போன்று ஒரு கோரிக்கை மனுவை தேர்தல் கமிஷனிடம் இன்று அகிலேஷ் தரப்பை சேர்ந்த ராம்கோபால் யாதவ் தலைமையிலான நிர்வாகிகள் வழங்கினர். நாங்கள்தான் உண்மையான சமாஜ்வாதி கட்சியினர். 90 சதவீதம் ஆதரவு எங்களுக்கே உள்ளது என ராம்கோபால் யாதவ் தெரிவித்தார்.
இரு தரப்பும் கட்சி சின்னம் கேட்டு மனு கொடுத்துள்ளதால், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சைக் ள் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்துவார்கள். பிறகு முலாயம் - அகிலேஷ் இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி யாருக்கு கட்சியில் அதிக ஆதரவு இருக்கிறது என்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும். அந்த ஆய்வில் தெளிவான நிலை கிடைத்தால் யாருக்காவது ஒருவருக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும். தேர்தல் கமிஷனால் ஒரு முடிவுக்கு வர முடியாத பட் சத்தில், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.