முதல்வர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கம் இல்லை- சிவ்பாலுடன் சமாதானமாக போக முலாயம் அட்வைஸ்!!
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவை நீக்கப் போவதில்லை என்றும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சித்தப்பா சிவ்பால் யாதவுடன் சமாதானமாக செல்லுமாறும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார்.
முலாயம்சிங் யாதவ் குடும்பத்தினரே சமாஜ்வாடி கட்சியில் கோலோச்சி வருகின்றனர். இதனால் யார் பெரியவர்? யாருக்கு அதிகாரம்? என்பதில் கடும் போட்டி ஏற்பட்டு சமாஜ்வாடி கட்சிக்குள் உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.
இதனிடையே இன்று சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முலாயம்சிங் யாதவ் கூட்டியிருந்தார். இக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், சிவ்பால் யாதவ் சரமாரியாக புகார்களைத் தெரிவித்ததால் அடிதடி நடக்கும் சூழ்நிலை உருவானது.
பின்னர் முலாயம்சிங் யாதவ் பேசும்போது சிவ்பால் யாதவ், அமர்சிங் ஆகியோருக்கு ஆதரவாக பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அகிலேஷ் யாதவ் அமர்சிங்கை சமாஜ்வாடி கட்சியில் மீண்டும் சேர்த்ததை ஏற்க முடியாது என வாதிட்டார்.
உடனே முலாயம்சிங் யாதவ் குறுக்கிட்டு, அகிலேஷ் யாதவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவில்லை.. அவர் சிவ்பால் யாதவுடன் சமாதானமாக போக வேண்டும் எனக் கூறிவிட்டு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்தது.