இரு கரங்கள்.. எதிர் துருவங்கள்.. இணையும் நேரம் இது.. எல்லாம் தேர்தலுக்காக!
உத்திரபிரதேசத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி உருவாகும் வாய்ப்பு தென்பட்டுள்ளது.
லக்னோ: எலியும் பூனையும் இனிமேல் ஒன்றாக சேர போகுது! நீரும் நெருப்பும் ஒன்றாக சேர போகுது! ஆமாம், இவ்வளவு காலம் முட்டி மோதிக்கிட்டு இருந்த மாயாவதியும்-அகிலேஷூம் ஒன்றாக சேரும் வாய்ப்பு கூடி வருகிறது.
எதிரிக்கு எதிரி நண்பன்னு சொல்லுவாங்களே... அதுதான் இப்போ நடந்திருக்கு. உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மண்ணை கவ்வியது. பகுஜன் சமாஜ் கட்சி தந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சியான ஆதரவுதான் சமாஜ்வாதி வெற்றி பெற தூண்டுகோலாக இருந்தது. இந்த அணுகுமுறை இனி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரப் போகிறதாம். இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன. ஆனால் இந்த முடிவு அவ்வளவு சீக்கிரம் இரு கட்சிகளும் எடுக்கவில்லை.
உச்சியில் நின்ற பாஜக
நாட்டிலேயே பெரிய மாநிலம் உத்திரபிரதேசம். அங்கு தற்போது அதிகாரத்தில் இருப்பது பாஜக. 80 லோக்சபா தொகுதிகளில் 73 இடங்களை கைப்பற்றம் அசாத்திய செல்வாக்கு பெற்றது பாஜக. இது போதாதென்று சட்டசபை தேர்தலிலும் உச்சிக்கு போய்விட்டது. ஆனால் ஒருகாலத்தில் டாப்-பில் இருந்த கட்சிகள் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும். இதற்கும் அடுத்துதான் காங்கிரஸ்!
ஊர் ரெண்டு பட்டால்..
தற்போது பாஜகவை விரட்ட ஒரே வழி இணைந்து எதிர்கொள்வதுதான் என்ற முடிவுக்கு இந்தக் கட்சிகள் வந்துள்ளன. அதன் முதல் முயற்சியாக, 3 எம்.பி. தொகுதி இடைத் தேரதலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என 3 கட்சிகளுமே ஓரணியில் திரண்டன. கரம் கோர்த்தன. 3 தொகுதியிலுமே வெற்றி பெற்று பாஜகவை அடித்து நொறுக்கினார்கள். இது பாஜக எதிர்பார்க்காத ஒன்று. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற யுக்தியில்தான் பாஜக கடந்த காலங்களில் பயணித்தது. ஆனால் பெரும்பான்மை பெற்ற ஒரு மாநிலத்தில், அதுவும் ஆளும் மத்திய அரசில் இப்படி ஒரு அடியை எதிர்பார்க்கவில்லை.
தொகுதி எவ்வளவு?
ஆனால் இந்த ஒற்றுமையை மேற்காணும் கட்சிகள் தொடர்ந்து வழிநடத்த முடிவெடுத்துள்ளன. முடிவு எடுத்தாகிவிட்டது, ஆனால் சீட் பஞ்சாயத்து ஓடத்தொடங்கியது. ஆளாளுக்கு கெத்து காட்ட தொடங்கினார்கள். தங்கள் கட்சிதான் பெரியது என்ற மனப்பான்மையில் மேடைகளில் மாயாவதி ஆகட்டும், அகிலேஷ் ஆகட்டும் தனித்தனியாக முழங்கி வந்தார்கள். இதில் மாயாவதி பேசும்போது, "எங்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை வழங்கினால் தான் எதிர்க்கட்சி கூட்டணியில் சேருவோம், இல்லாட்டி தனியே நின்றுவிட்டு போகிறோம்" என்று ஒரு பிட் போட்டார்.
கதைகட்டிய பாஜக
இதனால் சமாஜ்வாடி, காங்கிரஸ் தலையை சொரிய ஆரம்பித்தன. இதில் அகிலேஷூக்கு மண்டை காய்ச்சலே வந்துவிட்டது. ஏற்கனவே அப்பா, சித்தப்பாவுடன் வாய்க்கா தகராறு. இதில் மாயாவதி வேறு புதுசா பிரச்சனையை ஆரம்பிக்கிறாரே என்று நினைத்தார். என்னடா சாக்கு கிடைக்கும் இந்த கூட்டணி உடைய எதிர்பார்த்து காத்திருந்த பாஜகவோ, "அவ்வளவுதான், இனி இந்த கூட்டணி சேரவாய்ப்பில்லை" என்று கதை கட்டி விட தொடங்கினார்கள். ஆனால் அகிலேஷ் யாதவ் தன் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தாரா அல்லது தன்னிச்சையாக முடிவு செய்தாரா என தெரியாது.
அகிலேஷ் தடாலடி
எல்லாவற்றிற்கும் நேற்று தன் நிலைப்பாட்டை கூறி எல்லா குழப்பத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். "2019 தேர்தலில் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பெரிய கூட்டணி அமைவதற்கு நான் எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் இதற்காக நான் 2 அடி பின்நோக்கி செல்லவும் தயாராக இருக்கிறேன். கூட்டணி மட்டும் வலுவாக அமைய வேண்டும். அவ்வளவுதான். இந்த கூட்டணி கண்டிப்பாக அமையும், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று தடாலடியாக சொன்னார்.
க்ரீன் சிக்னல்
இதன்மூலம் மாயாவதிக்கும் க்ரீன் சிக்னல் கொடுத்தது போல் ஆயிற்று, அதே சமயம் பாஜகவின் வாயையும் அடைத்த மாதிரி ஆகிவிட்டது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தார் அகிலேஷ். இதில் அதிக சந்தோஷம் மாயாவதிக்குதான், அகிலேஷ் பேசும்போது, தொகுதி பங்கீட்டில் விட்டு தர தயார் என்றதுதான் வயிற்றில் பாலை வார்த்தது போல் ஆகிவிட்டது. எங்கே சீட் இழுபறி வந்து கூட்டணிக்கே பிரச்சனையாகி விடுமோ என்று பயந்து கொண்டிருந்தார் மாயாவதி.
பஞ்சாயத்து இருக்கு
அது போகட்டும்..... சீட் பஞ்சாயத்து ஒருத்தருக்கொருத்தர் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள் சரி... ஆனால் இந்த கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால் யார் உ.பி. முதல்வராவார்? யார் பிரதமர் வேட்பாளர் இருப்பார்? இதுக்கு ஒரு பஞ்சாயத்து கண்டிப்பா இருக்கு!!!