மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு தயாரா? கேட்கிறார் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்!
லக்னோ: மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு தயாரா? என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சவால்விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தாத்ரி என்னும் கிராமத்தில் மாட்டிறைச்சியை சமைத்து உண்டதற்காக, 50 வயது முதியவர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் லக்னோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
மக்கள் தத்தமது விருப்பப்படி வாழ்வதற்கும், அவர்களுடைய உரிமைகளை மதிப்பதற்கும் நமது நாடும், நமது மதமும் அனுமதி அளிக்கின்றன.
மாட்டிறைச்சி ஏற்றுமதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான முந்தைய அரசு ஆதரிப்பதாகச் சிலர் முன்பு குற்றம்சாட்டியிருந்தனர். தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள அவர்கள், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கலாமே?
இந்தியாவின் புகழை வெளிநாடுகளில் பரப்பி வருபவர்கள், அந்த நாடுகளில் வாழும் மக்கள் என்ன உண்கின்றனர் என்பதை அறிவார்களா? மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்ய தயாரா?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் சவால்விடுத்துள்ளார்.