அகிலேஷ் யாதவுக்கு அவரோட சித்தி சூனியம் வச்சுட்டாங்களாமே!
லக்னோ: உ.பி அரசியல் புயல் இப்போதைக்கு ஓயாது போல. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாடி கட்சியின தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையிலான பூசலை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு எம்.எல்.சி. முலாயமுக்கு எழுதியுள்ள கடிதம் அமைந்துள்ளது.
முலாயம் சிங்கின் 2வது மனைவியான சாதனா, அகிலேஷுக்கு சூனியம் வைத்து விட்டதாக புதுமுக எம்.எல்.சியான உதய்வீர் சிங் என்பவர் முலாயமுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதால் உ.பி. அரசியல் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
சித்தியால்தான் அகிலேஷ் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறியுள்ள உதய்வீர் சிங், முலாயம் சிங் உடனடியாக கட்சியை அகிலேஷ் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு குண்டைத் தூக்கி வீசியுள்ளார். இந்தக் கடிதத்தால் சமாஜ்வாடிக் கட்சி மீண்டும் கலகலத்துப் போய்க் கிடக்கிறது.
இந்தக் கடிதம் குறித்து சிங் விளக்குகையில் இது தனிப்பட்ட கடிதம். நான் யாரையும் குறை சொல்லவில்லை. நடந்ததையும், நடப்பதையும்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். கட்சியினர் கருதுவதைத்தான் நான் சொல்லியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
முலாயம் சிங்கின் 2வது மனைவிதான் சாதனா. இவர் முலாயமின் தம்பி சிவபால் யாதவுடன் சேர்ந்து கொண்டு அகிலேஷுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக ஏற்கனவே ஒரு பேச்சு உண்டு. இதைத்தான் தற்போது கடிதம் மூலமாக சுட்டிக் காட்டியுள்ளார் உதய்வீர் சிங் என்கிறார்கள்.
அகிலேஷுக்கு, சாதனா சூனியம் வைத்து விட்டதாக உதய்வீர் கூறியுள்ளதுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் சிவபால் யாதவும், அகிலேஷுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு பொறாமைப்படுவதாகவும் உதய்வீர் சிங் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு அகிலேஷுக்கு எதிராக செயல்படுவதாகவும் உதய்வீர் கூறியுள்ளார்.
உடனடியாக சிவபால் யாதவை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். அகிலேஷிடம் கட்சியைக் கொடுக்க வேண்டும் என்றும் உதய்வீர் சிங் கூறியுள்ளார்.
ஆனால் இதற்குக் கடும் கணடனம் தெரிவித்துள்ள சிவபால் யாதவ் ஆதரவாளரான அஷு மாலிக் கூறுகையில், 500 ஓட்டு வாங்கக் கூட வக்கில்லாதவர்கள்தான் இப்படிப்பட்ட கடிதத்தை எழுதுவார்கள் என்றார் கோபமாக.