பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்ஷய்குமாருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்ட 25 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோருக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி உதவி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சம் வழங்கினார். அதே போல் சாய்னா நேவால் ரூ.6 லட்சம் வழங்கினார்.
இதனால் மாவோயிஸ்ட்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு பஸ்தார் பகுதி மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் இவ்விருவருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபலங்கள் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காகவும், அவர்களுக்காக போராடி வரும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஏழை மக்களை தாக்கி வரும் ராணுவ படையினர், போலீசார் ஆகியோரை ஆதரிக்க கூடாது.
போலீசாரின் தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடிகர்கள், பிரபலங்கள் குரல் கொடுக்க வேண்டும். துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அக்ஷய் மற்றும் சாய்னா ஆகியோர் உதவியது மிகவும் கண்டனத்திற்குரியது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு பாதுகாவலர்கள் தலித்கள் மற்றும் முஸ்லிம்களை தாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.