டெல்லி, மும்பை, பெங்களூருவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை அடுத்து டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் நகர டி.ஜி.பி. மற்றும் காவல் துறை ஆணையாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அந்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலாத்தலங்கள், புராதன கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களை அல்-காய்தா அமைப்பினர் குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தாக்குதலையடுத்து, இந்தியாவின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல்-கொய்தாவின் இந்தியப் பிரிவை துவக்குவதாகக் கூறி கடந்த வருடம் செப்டம்பரில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மான்-அல்-ஜவாகிரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் இந்தியாவின் குஜராத், அஸ்ஸாம், அஹமதாபாத், காஷ்மீர் போன்ற இடங்களில் இஸ்லாமிய மக்கள் ஒடுக்கப்படுவதாகவும் அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உளவுத்துறையின் தற்போதைய எச்சரிக்கை காரணமாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.