வெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி
அலிகார்: தான் பிரதமராக வேண்டும் என தினமும் பிரார்த்தித்த பெண்ணுக்கு நன்றிக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் மோடி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி கடந்த 26ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.
அதற்கு முன்னதாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்த ஸ்நேகா என்ற பெண் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் அவர், ‘பா.ஜ. கட்சியும் நீங்களும் வெற்றி பெற வேண்டும். நீங்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும். நீங்கள் பிரதமராவதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. நாட்டை முன்னேற்றப் பாதைக்கு நீங்கள் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காக நான் தினமும் பிரார்த்திக்கிறேன்' என எழுதியிருந்தார்.
இதனை தற்போதும் நினைவில் கொண்ட பிரதமர் மோடி அப்பெண்ணுக்கு தற்போது பதில் கடிதம் எழுதி ஆச்சர்யப் படுத்தியுள்ளார். அப்பதில் கடிதத்தில் மோடி ‘உங்களது விரிவான மனதைத் தொடும் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. கடவுளின் கருணையால் உங்களது கனவுகள் நனவாகட்டும். நீங்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்' எனக் கூறியுள்ளார்.
மோடியின் கடிதத்தை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்நேகா கூறுகையில், ‘நாட்டின் 15வது பிரதமர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இது எனது வாழ்நாளின் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். அவர் பிரதமரானதும் நாட்டிற்கு நல்ல நாள் வந்து விட்டது' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.