ராஜ்யசபா தேர்தல்: தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு- சரத்பவாரும் வெற்றி
டெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..
மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் 6 பேரும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தமிழகத் தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டப்பேரவை செயலாளருமான ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
6 பேரும் தேர்வு
மாநிலங்களவை உறுப்பினரக்ளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, முத்துகருப்பன் மற்றும் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் மற்றும் திமுகவின் திருச்சி சிவா ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 3 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
வெற்றி சான்றிதழ் வாங்காத அதிமுக எம்.பிக்கள்
இதனிடையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், தி.மு.க.,வின் திருச்சி சிவா ஆகியோரிடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., சார்பில், தேர்வு செய்யப்பட்ட, நான்கு பேரும், நேற்று, 'பிரதமை' என்பதால், சான்றிதழ் வாங்கவில்லை.மாதந்தோறும், அமாவாசைக்கு அடுத்த நாள், பிரதமை திதி வரும். இந்நாளில், கடவுள் பக்தியுடையோர், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்பவார் தேர்வு
இதேபோல் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்குப் 37 வேட்பாளர்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா, திக்விஜய் சிங், முரளி தேவ்ரா, குமாரி செல்ஜா, ராம்தாஸ் அதாவலே (இந்திய குடியரசுக் கட்சி), விஜய் கோயல் (பாஜக) ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
பீகாரில் 5 பேர்
பிகாரிலிருந்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் 3 பேர், பாஜகவிலிருந்து 2 பேர் தேர்வாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங், பாஜக துணைத் தலைவர் பிரபாத் ஜா, சத்ய நாராயண ஜதியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஹரியானா - ஜார்கண்ட்
ஹரியானாவிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்ஜா, எதிர்க்கட்சியான இந்திய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் ராம் குமார் காஷ்யப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
ஜார்க்கண்டில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), முன்னாள் துணை முதல்வர் காலம் சென்ற சுதிர் மகதோவின் மனைவி சவிதா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
ஆந்திராவில் போட்டி
தெலங்கானா விவகாரத்தில் கொந்தளிப்பு நிலவும் ஆந்திரத்தில் உள்ள 6 இடத்துக்கு காங்கிரஸ் அதிருப்தியாளர் உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 1999க்குப் பிறகு இந்த மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் இப்போதுதான் போட்டி நிலவுகிறது.
2 போட்டி வேட்பாளர்களில் கே.வி.வி.சத்யநாராயண ராஜு வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். ஆனால் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் அதல பிரபாகர் ரெட்டி காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டும் போட்டியிலிருந்து வாபஸ் பெறவில்லை.
அசாமிலிருந்து தேர்வு செய்யப்பட உள்ள 3 இடங்களுக்கு 4 பேர் களத்தில் உள்ளனர். ஒடிசாவில் 4 இடங்களுக்கு 5 பேர் போட்டி போடுகின்றனர். மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கு 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
18 இடங்களுக்கு தேர்தல்
ஆந்திரத்தில் 6, மேற்கு வங்கத்தில் 5, ஒடிசாவில் 4, அசாமில் 3 இடங்கள் என மீதமுள்ள 18 இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது.