தாத்ரி சம்பவத்தில் பா.ஜ.க. தலைவர் மகன் உட்பட 10 கொலையாளிகள் கைது!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியை கிளப்பி முஸ்லிம் முதியவர் இக்லாலை அடித்தே படுகொலை செய்ததாக பா.ஜ.க. தலைவர் மகன் உட்பட 10 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையில் தொடர்புடைய கடைசி கொலையாளியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சியை முஸ்லிம் முதியவர் இக்லால் தமது வீட்டில் வைத்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு கும்பல் வதந்தியை கிளப்பிவிட்டது. இதனைத் தொடர்ந்து இக்லால் வீட்டுக்குள் நுழைந்த மதவெறியர்கள் அவரையும் அவரது மகனையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதில் இக்லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய உள்ளூர் பா.ஜ.க. தலைவர் மகன் விஷால் உட்பட 10 கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தாத்ரி காவல்துறை அதிகாரி அனுராக் சிங், இக்லால் படுகொலையில் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களில் 9 பேர் ஏற்கனவே அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுவிட்டனர்.
கடைசி கொலையாளி ஹரி ஓம், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சாரதானா நகரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது ஞாயிற்றுக்கிழமையன்று பிடிபட்டார். மொத்தம் 10 கொலையாளிகளையும் நாங்கள் கைது செய்துள்ளோம் என்றார்.