சிஏஏ.. என்ஆர்சிக்கு எதிரான அனைத்து விளம்பரத்தை உடனே நிறுத்துங்க.. மம்தாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு
கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று சொல்வதையும், விளம்பரம் செய்வதையும் உடனே மேற்கு வங்க அரசு நிறுத்த வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகிவற்றுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த சட்டங்களை மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில மக்களிடம் மம்தா பானார்ஜி உறுதி அளித்து வருகிறார். அத்துடன் குடியுரிமை சட்டத்துக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில உயர்நீதிமன்றத்தில் (கொலகத்தா உயர்நீதிமன்றம்) அம்மாநில முதல்வர் மம்தாவின் அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று சொல்வதையும், விளம்பரம் செய்வதையும் உடனே மேற்கு வங்க அரசு நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.