ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு: துணை முதல்வர் உள்பட பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ள நேரத்தில் பாஜகவை சேர்ந்த 9 அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க உள்ளார் முதல்வர் மெஹபூபா முஃப்தி. இந்நிலையில் மெஹபூபாவின் அமைச்சரவையில் உள்ள 9 பாஜக அமைச்சர்களையும் தங்களின் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அவர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் பால் சர்மாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை அளித்துள்ளனர். ராஜினாமா செய்தவர்களில் ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங்கும் அடக்கம். அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதால் பிடிபி கூட்டணியில் இருந்து விலகுவதாக அர்த்தம் இல்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அமைச்சர்களின் செயல்பாடுகள் கட்சி மேலிடத்திற்கு பிடிக்கவில்லையாம். அதனால் அமைச்சரவையில் புதுமுகங்களை சேர்க்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
முன்னதாக கதுவாவில் 8 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்ட பாஜக அமைச்சர்கள் லால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்கள். இந்நிலையில் அனைத்து பாஜக அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளார்கள்.