காங். தலைவர்கள் 70 வயதிலேயே 'ரிட்டையர்டு' ஆகிடுங்க..: ஜெய்ராம் ரமேஷ் கருத்தால் புதுசர்ச்சை
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 70 வயதிலேயே தாங்கள் வகித்து வரும் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கும் கருத்து அக்கட்சியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் ராகுலுக்கு நெருக்கமானவர்களில் ஒருவர் ஜெய்ராம் ரமேஷ். அடுத்த மாதம் 60 வயதை எட்டப் போகும் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சி சீரமைப்பு தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தலைமுறை இடைவெளியானது சரி செய்யப்பட வேண்டிய முக்கியமான ஒன்று. பிரதமர் முதல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் வரை 70 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற வேண்டும்.
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 81 வயதாகிறது. உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு 72 வயதாகிறது. பாதுகாப்பு அமைச்சர் அந்தோணிக்கு 73 வயதாகிறது. அதேபோல் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்பால் ரெட்டி, பேணி பிரசாத் வர்மா ஆகியோரும் 70 வயதைக் கடந்தவர்கள். நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 70 வயதை 2 ஆண்டுகளில் எட்டிவிடுவார்.
கட்சி அமைப்புகளிலும் வயதான தலைவர்கள் அமர்ந்து கொண்டு இளைஞர்களை உள்ளே வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டுவருகின்றனர். மூத்த தலைவர்கள் என்பவர்கள் கட்சி அல்லது அரசின் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டு இளையோருக்கு ஆலோசனை கூறக்கூடியவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடத்தில் இருக்கிறது
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.