பெங்களூரில் நாளை அனைத்திந்திய தமிழ் சங்கப் பேரவையின் செயற்குழு கூட்டம்!
பெங்களூர்: அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் முதலாவது செயற்குழுக் கூட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன், அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை செயல் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரவையின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள தலைநகர்த் தமிழ்ச் சங்கத்திலும், செயல் அலுவலகம் பெங்களூரு தமிழ்ச் சங்கத்திலும் இயங்கும். பேரவையின் முதல் செயற்குழுக் கூட்டம் ஏப்ரல் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது.
தில்லைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அமைப்புக் கூட்டத்தில் நாட்டின் பலவேறு பகுதிகளில் இயங்கி வரும் தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு பேரவை உருவாக்கப்பட்டது.
இந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். டெல்லி, சென்னை, திருவனந்தபுரம், கோட்டயம், மைசூர், மங்களூர், கர்நாடகத்தின் மற்ற பகுதிகள், மும்பை, நவி மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், விசாகப்பட்டினம், புவனேசுவரம், புதுச்சேரி, அகமதாபாத் ஆகிய இடங்களில் இயங்கிவரும் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மற்ற அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழர் விழாக்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்துதல், மாநிலங்களில் மொழிச் சிறுபான்மையராக வாழும் தமிழர்களின் சிக்கலுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்தல், பிறமொழி இலக்கியங்களைத் தமிழிலும், தமிழ் இலக்கியங்களைப் பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்ய அந்தந்த மாநில அரசுகளின் உதவியை நாடல், மாநில மொழிகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அறிவிக்க கோருதல் போன்ற செயல்திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.