காவிரி: பாதுகாப்பு கருதி பெங்களூரில் இரு தினங்களுக்கு மதுக் கடைகள் மூடல் - காவல்துறை
பெங்களூரு: தமிழகத்துக்கு வரும் 21-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் இன்று முதல் நாளை நள்ளிரவு வரை மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
டெல்லியில் இன்று காவிரி மேற்பார்வை குழு கூட்டம் அதன் தலைவர் சசிசேகர் தலைமையில் நடந்தது. இதில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தலா 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேற்பார்வை குழு அறிவித்துள்ளது.
இதையடுத்து கர்நாடக அமைச்சர், போலீஸ் டிஜிபி, மற்றும் கமிஷ்னருடன் பாதுகாப்பு பற்றி அவரச ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் இன்று காலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 1 மணி வரை இரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு கருதி மதுக்கடைகளை மூட காவல் துறை உத்தரவிட்டது.
மேலும், காவிரி விவகார வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று பெங்களூரில் கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் இன்று மற்றும் நாளை பெங்களூருக்கான பேருந்து சேவையை நிறுத்துவதாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.