சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது:கர்நாடக கேபினட் கூட்டத்தில் முடிவு
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான சவுதானில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்பமொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் பரமேஷ்வர், எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
தமிழகத்திற்கு மேற்கொண்டு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க கூடாது என தேவகவுடா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது
அதன்பின்னர் அமைச்சரவை கூட்டம் அவசரமாக இரவில் மீண்டும் நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் ஒன்றுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சனிக்கிழமை சட்டமன்றத்தைக் கூட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, கர்நாடக அணைகளில் இருந்து தற்சமயம் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு உதாசீனப்படுத்தியிருப்பதால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.