ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக அதிரடி குறைப்பு: அருண் ஜெட்லி
டெல்லி: ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஹோட்டல் துறையிலுள்ளவர்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.
23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஏசி, ஏசியற்ற ரெஸ்டாரண்டுகள் என்று தரம்பிரித்து இனி ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது. அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும் இனிமேல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படும்.
ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு பழைய வரி விதிப்பே பொருந்தும். அதேபோல ஒரு நாளைக்கு 7500க்கும் மேல் தங்கும் வாடகை வாங்கும் ஹோட்டல்களுக்கும் பழைய வரி விதிப்புதான் பொருந்தும். கேட்டரிங் செய்யப்படும் உணவுக்கும் பழைய வரி விதிப்பு பொருந்தும் என்றார்.
ரெஸ்டாரண்டுகளில் இதுவரை 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் அங்கு உணவு பொருள் விலை அதிகரித்தது. இப்போது வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதால் ரெஸ்டாரண்டுகளில் விலை குறையும். இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு இந்திய ஹோட்டல் உரிமையாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம், ரெஸ்டாரண்ட் தொழிலுக்கு இனிமேல் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி கிடையாது என்று ஜெட்லி தெரிிவித்துள்ளார்.