தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு ஆதரவு: அருண் ஜெட்லி
கொல்கத்தா: தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான வரைவு சட்டம் குறித்து விவாதிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு தமிழகத்தை தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மசோதா குறித்து தமிழக அரசு சில கருத்துக்களை வழங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. மற்ற மாநிலமும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார். இந்த மசோதாவின் கீழ் விதிக்கப்படும் ஒரு சதவீத கூடுதல் வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு சரி செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து மாநில நிதியமைச்சர்கள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 22 மாநில நிதியமைச்சர்கள் ஜி.எஸ்.டி. மசோதா குறித்த தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் சரக்கு சேவை வரி மசோதா எளிதில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறாமல் உள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான சரக்கு சேவை வரி விதிக்கப்படும்.