பெரிய கேக் இருந்தா தான் பெரிய பீஸ் கிடைக்கும்.. 5 டிரில்லியன் டாலர் இலக்கு பற்றி பிரதமர் பேச்சு
வாரணாசி: அடுத்து வரும் 5 ஆண்டுகளில் நம் நாடு 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதார நாடாக நிச்சயம் மாறும் என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, பாஜக உறுப்பினர் சேர்க்கை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார். இன்று பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டுள்ள பாஜக உறுப்பினர் சேர்க்கை திட்டம், வரும் ஆகஸ்ட் 11 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகிறது
பெருந்திரளாக பங்கேற்ற கட்சி உறுப்பினர்களிடையே பேசிய பிரதமர் மோடி, கேக்கின் அளவு என்பது முக்கியம் என ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று கூறுவார்கள்.
தடபுடலாக களம் இறங்கும் ஏசிஎஸ்.. விஜயகாந்த்துடன் சந்திப்பு.. பிரச்சாரத்திற்கு யார் வர போறாங்களோ
அதற்கு என்ன பொருள் என்றால் கேக்கின் அளவு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அதற்கேற்ப தான் அதனை கட் செய்து கொடுத்தால் மக்களுக்கு பெரிய கேக் துண்டுகள் கிடைக்கும் என்பதாகும். அது போல தான் பொருளாதாரம் எவ்வளவு உயருகிறதோ, மக்களும் அந்த அளவுக்கு பலன் பெறுவார்கள்.
எனவே தான் நாங்கள் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார். நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது சிறப்பான பட்ஜெட். இதன் மூலம் 5 டிரில்லியன் பொருளாதார நாடு என்ற இலக்கை நிச்சயம் அடைவோம்.
எதிர்கட்சிகளின் விமர்சனம் என்னை சோர்வுற செய்யவில்லை மாறாக, மேலும் வலுவை தான் தருகிறது. கடந்த காலத்தில் இந்தியா மெதுவாக நடந்தது. ஆனால் தற்போதோ அது புதிய இந்தியாவாக உருமாறி வேகமாக ஓட துவங்கியுள்ளது.
பொருளாதார சரிவால் உலகிலுள்ள பல முக்கிய நாடுகள் திணறுகின்றன. ஆனால் இந்தியா வலுவாக உள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் "தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள்" என்று பிரதமா் குற்றம்சாட்டினார். பட்ஜெட்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்கை அடைய நாங்கள் வழிகாட்டியுள்ளோம்.
வரவிருக்கும் 10 ஆண்டுகள் என்ற தொலை நோக்கு பார்வையுடன் தான் நாங்கள் களமிறங்கியுள்ளோம். எனவே புதிய இந்தியாவில் ஏழைகள் அனைவரும் பணக்காரர்களாக மாறும் காலம் விரைவில் வரும் என்றார்.
நீர் கிடைப்பதை விட, தண்ணீரை வீணாக்குவதும் கவனக்குறைவாகப் பயன்படுத்துவதுமே தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே தேவையின்றி தண்ணீரை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். தண்ணீரை அனைவரும் சேமிக்க வேண்டும்.
தண்ணீரை சேமிப்பதன் மூலம் மின்சாரம் கூடுதலாக பெற முடியும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என்றார்
அது போல இந்தியா தனது 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் நேரத்தில், ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் சொந்த வீடு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.