நல்லா தள்ளு, அமுக்கி தள்ளு: ம.பி. முதல்வரின் விமானத்தை தள்ளிய போலீசார்
போபால்: மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிஹ் சவ்ஹானின் விமானத்தை போலீசார் சேர்ந்து தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்ஹான் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திங்கட்கிழமை தனி விமானம் மூலம் சிந்த்வாரா சென்றார். நண்பகல் 12 மணிக்கு அவரது விமானம் தரையிறங்கியது. அவரின் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் சிந்த்வாரா தொகுதியில் 9 முறை வெற்றி பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் கமல் நாத்தின் விமானம் தரையிறங்க வந்தது.
ஆனால் சிந்த்வாரா விமான நிலையத்தில் ஒரு நேரத்தில் ஒரு விமானம் தான் தரையிறங்க முடியும் என்பதால் கமல் நாத்தின் விமானம் வானில் 20 நிமிடங்கள் வட்டமிட்டது. இதற்கிடையே ஓடுதளத்தில் நின்ற சவ்ஹானின் விமானத்தை பல போலீசார் சேர்ந்து 15 முதல் 20 அடி தூரம் தள்ளி சென்று நிறுத்தினர். அதன் பிறகே கமல் நாத்தின் விமானம் தரையிறங்கியது.
கமல் நாத்தின் விமானம் சவ்ஹானுக்கு முன்பு அங்கு தரையிறங்க வேண்டியது. ஆனால் தாமதமாக வந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
விமான நிலையத்தில் டோ வாகனம் இல்லை. அதனால் போலீசாரை விமானத்தை தள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எரிபொருளை மிச்சப்படுத்தவே விமானி விமானத்தை தள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இது வழக்கமான ஒன்று தான் என்றனர்.